யாழ். மாவட்ட திரைத்துறைக் கலைஞர்கள் அமைச்சர் நாமலுடன் சந்திப்பு

557

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இளம் குறும்பட தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் இடையேயான ஒரு கலந்துரையாடல் நேற்று முன்தினம் (08) யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் பங்கேற்புடனும் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் இளம் கலைஞர்கள் குறும்பட தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அவர்கள் தமது அடையாள அட்டை பெற்றுகொள்வதிலுள்ள இடர்பாடுகள் உட்பட கலைஞர்களின் பல தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறியப்பட்டது மற்றும் “கலாபூஷணம்“ விருது பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் இழுபறி நிலமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், ‘COVID – 19 இடர் பிரச்சனைகள் தீர்ந்த பின் யாழ் குறுந்திரைப்பட விழா ஒன்றை மாவட்டத்திற்கு வெளியே நடாத்துவதன் ஊடக இங்கு உள்ள பல்வகை கலைஞர்களை வெளிஉலகிற்கு எடுத்துகாட்டுவோம்’ எனக்குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.