ஈழவாணியின் “நந்திக் குவேனி” பாடல் படப்பிடிப்பு நிறைவு

1031

பூவரசி மீடியா சார்பில் ஈழவாணி, கமலசீலன் இணைந்து தயாரித்திருக்கும் பிரமாண்டமான பாடல் “நந்திக் குவேனி”. 3ஏ ஸ்ரூடியோ மற்றும் வி.திலீபனும் இவர்களுடன் கைகோர்த்திருக்கின்றார்கள்.

ஜெயந்தன் விக்கியின் இசையில் உருவான இப்பாடலுக்கான ஒளிப்பதிவு ரெஜி செல்வராசா, படத்தொகுப்பு அலெக்ஸ் கோபி, ஒப்பனை அன்ட்ரூ ஜூலியஸ். நடன இயக்கம் வாகீசன்.

நவயுகா, மிதுனா, விதுஷான், சுகிர்தன், ஷாஷா ஷெரீன், கீர்த்தி, திருமலை பிரணா, வினித், நஜோமி, ஷஜந்தி, அருண் ராஜ், ஜசோதரன் ஆகியோர் நடித்திருக்கும் இப்பாடலின் இணை இயக்கம் கார்த்திக் சிவா. இயக்கம் ஈழவாணி.

நந்திக் குவேனி பாடலின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இப்படைப்பு குறித்து அதன் இயக்குனர் ஈழவாணி தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

நந்திக்குவேனி யும் நாங்களும்-1

இது மனந்திறந்த பதிவு, நந்திக்குவேனியில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள். தொழிநுட்பக் கலைஞர்கள் இணை இயக்குனர்கள் உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகளும் அன்பும்.

எல்லாச்சிரமங்களையும், சுட்டெரிச்ச வெயிலையும் பொறுத்துக்கொண்டு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள். எல்லா நடிகர்களுமே சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு முகம் சுழிக்காமல் அதி உட்சமான நடிப்பை தந்திருக்கிறார்கள்.

நந்திக்குவேனியில் இப்படி ஒரு குழுஅமைந்தது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியும் பணிகளைச் சிறப்பாக முடிக்கவும் பெரும் உதவியாக இருந்தது.முகப்புத்தகத்தில் எழுதி நீண்ட நாட்கள் ஆகிற்று. இந்த நந்திக்குவேனியின் அனுபவங்கள் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் போல் இருக்கிறது.

கொரோணாவுடன் இலங்கையில் தங்கவேண்டிய சூழ்நிலை. சென்னையில் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு வந்த மனநிலை மாற பலமாதங்கள் எடுத்தது. நம்மைப்போன்ற படைப்பாளிகளுக்கு நாடோடி வாழ்க்கை தான் சொந்தம் என்ற மனநிலைலைத் தக்கவைத்துக்கொண்டேன். அவ்வளவு பரபரப்பாக இருந்துவிட்டு எப்படி பலமாதங்கள் சும்மா இருப்பது. லூஸி திரைப்பட படப்பிடிப்பு முடிந்தும் சிலமாதங்கள் ஆகியது. பரபரத்த மூளைக்குள் நந்திக்குவேனி சிக்கியது.

நந்திக்கடலில் நிகழ்ந்துமுடிந்த துயரத்தை சிறு எறும்பாகவாவது நானும் பதிவு செய்ய வேண்டும் என்று பல வருடங்களாகப் புலம்பிய மனசிற்கு இந்த வருடம் கொரோணா காலம் எனக்கு வழியமைத்துத் தந்திருக்கிறது. திரிபுபடுத்திய குவேனியின் கதையை நந்திக்கடல் துயரத்துடன் திணித்திருக்கிறேன்.

இந்த குவேனியின் திரிவுபடுத்திய கதையை கடந்த வருடங்களில் நடந்த பூவரசி விருது விழா மேடையில் இசைநாடகமாக்க முயன்றிருந்தேன். இது தொடர்பாக 2019ல் கவின்மலர், 2017ல் சினிமாபட்டறை ஜெராவ், நடிகை சுதர்சினி போன்றவர்களை எல்லாம் தொடர்பு கொண்டிருந்தேன். அவர்களும் செய்யலாம் என்றேதான் இருந்தார்கள் பின்னர் எப்படியோ தொடர் வருடங்களில் நடக்காமல் போய்விட்டது.

அந்த திரிபுபடுத்தி வைத்திருந்த குவேனிக்கதையை நந்திக்கடலின் துயரப்பாடலுடன் இணைத்தேன். அதுதான் 20 நிமிட திரிவுபட்ட வரலாற்றுக் கதையாக நந்திக்குவேனி உருவாகியிருக்கிறது.

எது யாரால் நிகழ்த்தப்பட எழுதியிருக்கிறதோ அது அவர்களால் நிகழ்ந்தோயும். நந்திக்குவேனி தொடரும்…