வெந்து தணிந்தது மதிசுதாவின் படப்பிரச்சனை!

961

ஈழத்து இயக்குனர் மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு” படத்தலைப்பு விவகாரம் அண்மையில் பேசுபொருளானது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே! இதே தலைப்பில் கௌதம் மேனன் – சிம்பு கூட்டணியில் உருவாகிவரும் படத்திற்கும் அத்தலைப்பைத் தேர்ந்தெடுத்ததே இந்தப் பிரச்சனை பேசப்படக்காரணமானது.

வாசிக்க – கௌதம் மேனனால் முடங்கிப் போன மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம்?!

பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் இந்தத் தலைப்பை முதலில் வைத்த ஈழத்து இயக்குனர் மதிசுதாவுக்கான ஆதரவு அலை மேலெழுந்திருந்தது. அது தென்னிந்தியா வரை பேசப்பட்டும் இருந்தது. இதனால், அங்கிருக்கும் சில முக்கியமானவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

முடிவில், அவர்களது படம் “கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு” என்றும் மதிசுதாவின் படம் ”ஈழத்தின் வெந்து தணிந்தது காடு” என்றே வரும் எனவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக இயக்குனர் மதிசுதா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக என் தூக்கத்தைத் தொலைக்க வைத்த விடயம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமான சுமூகமான தீர்வை எனக்கு கொடுத்துள்ளது.
”சில இடங்களில் பெரிய மனிதர்கள் தம் பெரிய மனங்களை திறந்தே வைத்திருப்பார்கள்”

தலைப்பு விடயத்துக்கு தூக்கம் எல்லாம் ஏன் போக வேண்டும் என சிலர் தமது கணக்கிலும் போலிக் கணக்கிலும் தட்டச்சிட ஆரம்பித்திருப்பார்கள்.

இத்தலைப்புப் பிரச்சனையால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு தளத்துக்கும் திரைப்படத்தை விற்க முடியாத நிலை வரும் என்பது தான் என் பிரச்சனையாக இருந்தது என்பதை புரிந்து இதற்காக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் குரல் கொடுத்தபடி இருந்த அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.. அடிக்கடி என்னோடு தொடர்பில் வந்து பேசியபடி இருந்தவர்களுக்கும் நன்றிகள்.

பிரச்சனை தொடர்பாக ஊடகங்களால் கேட்கப்பட்ட செவ்வி அனைத்தையும் தவிர்த்தேன் (ஏகலைவன் அண்ணாவுடையதைத் தவிர) பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கும் நேரம் நான் தவறுதலாக உதிர்க்கும் ஒரு வார்த்தை கூட தேவையற்ற திசை திருப்பலை ஏற்படுத்தி விடுமோ என்ற காரணமாகவே தவிர்த்தேன். அதைப் புரிந்து கொண்ட அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றிகள்.

தீர்வு – இப்பேச்சு வார்த்தையில் இயக்குனரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி அண்ணாவுக்கும் நாசர் ஐயாவுக்கும், அன்பு அண்ணன் இயக்குனர் கவிதாபாரதி அண்ணனுக்கும் பெரு நன்றிகள். இதற்காக பொது மனிதராக தெரிவு செய்யப்பட்டிருந்த சுரேஷ் காமாட்சி அண்ணாவுக்கு 3 நாள் அவகாசத்தில் மதிப்பிற்குரிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் உறுதியாகவே ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தார்.

”தமது படத்துக்கு முன்னதாக இப்படம் வர இருப்பதால் அதனால் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. முதலே வருவதால் படத்துக்கும் பாதிப்பு ஏற்படாது. அதன் வெளியீட்டுக்கு தம்மாலான உதவிகளை செய்வேன் எனவும், அவர்களது கதை உலகுக்கு தெரிய வேண்டியது அதற்கு எப்பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு தம்மால் உதவ முடியும்” என்பதையும் தெரிவித்திருக்கின்றார்.

அவர்களது படம் கௌதம் வாசுதேவ் மேனனின் ”வெந்து தணிந்தது காடு” என்றும் எனது படம் ”மதிசுதாவின்” வெந்து தணிந்தது காடு என்றும் வரலாம் என்ற உடன்பாடு முன்வைக்கப்பட்டாலும். இப்படம் எம் இனத்தின் கதை என்பதால் எனது பெயருக்குள் அடக்கமாட்டேன் என்ற காரணத்தை முன் வைத்ததுடன் ”ஈழத்தின் வெந்து தணிந்தது காடு” என்றே வரும் என்ற முடிவை முன் வைத்தேன்.

பாரதியாருக்குரிய அவ்வரி எனக்குரியதல்ல அது பொதுவானது , ஆனால் என்படத்துக்கு பாதிப்பு வராமல் இருந்தால் சரி என்ற எனது கோரிக்கைக்கு எந்தவித தாக்கமும் இன்மையால் 7 நாளாக காத்திருந்த இவ்விடயம் முடிவுக்கு வந்திருக்கின்றது.

இதற்காக குரல் கொடுத்த யாரையும் தனித்தனியே பெயர் சொல்லாமைக்கு பொறுத்தருளவும். அதில் ஒருவருடைய பெயரை தவற விட்டாலும் அது தவறு என்பதற்காகவே குறிப்பிடவில்லை.

விரைவில் படம் தொடர்பான அடுத்த பெரு அறிவிப்புடன் சந்திக்கின்றேன்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா