தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த ‘அடங்காமை’ படக்குழு!

342

பொன். புலேந்திரன் வழங்கும் ‘வொர்ஸ் பிக்ஸர்ஸ்’ தயாரிப்பில் இயக்குநர் ஆர்.கோபால் எழுதி இயக்கி விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை’.

திருக்குறளின் 13ஆவது அதிகாரமான அடக்கமுடைமை அதிகாரத்தில் இடம்பெறும் அடங்காமை இயல்பால் வரும் விளைவுகளைக் கூறும் கதையாக இது உருவாகியுள்ளது.

ஈழச் சிக்கலை மையக் கருத்தாகக் கொண்ட இத்திரைப்படத்தில் ஈழத் தமிழரான ஷெரோன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

இத்திரைப்படத்தில் “உள்நாட்டில நடந்த சண்டையிலே சிக்கி சீரழிஞ்ச பரதேசிகள் நாங்கள்” என்ற வசனங்களோடு அகதி முகாம் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இன்றும் கடந்த கால போரின் வடுக்களோடு தமிழ்நாட்டில் ஈழமக்கள் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஈழத் தமிழர்களை அங்கீகரிக்கும் வகையில் “ஈழத்தமிழர்களின் ‘அகதி முகாம்கள்’ இனி ‘மறுவாழ்வு முகாம்கள் ‘என அழைக்கப்படும்” என அறிவித்தமைக்காக ‘அடங்காமை’ திரைப்படக் குழுவினர் உலகத் தமிழர்களின் சார்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி முதல்வர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அகதிகள் என்றால் கதியற்றவர்கள், ஏதிலிகள், ஆதரவற்றவர்கள், நிராதரவானவர்கள் என்று கருதப்பட்டதை மாற்றி இந்த அவலத்தைத் துடைக்கும் வகையில் மறுவாழ்வு முகாம்கள் என்று பெயரிட்டு ஈழத்தமிழர்களை அங்கீகரித்துள்ளார் என்று கூறித் தமிழக முதல்வரை நன்றியுடன் பாராட்டுகிறது ‘அடங்காமை’ படக்குழு.