மதிசுதா தயாரிப்பில் குருவின் இயக்கத்தில் “அலை” குறும்படம்

561

அகேனம் சார்பாக இயக்குனர் மதிசுதாவின் தயாரிப்பில் தங்கவேல் குருவின் இயக்கத்தில் அண்மையில் வெளியாகியுள்ள குறும்படம் “அலை“.

”அப்பாக்கள் போல வாழ நினைக்கும் தந்தைகளுக்கு சமர்ப்பணம்” எனக்குறிப்பிட்டு வெளியாகியிருக்கும் இக்குறும்படம், போட்டி ஒன்றுக்காக கையடக்கத் தொலைபேசியில் படமாக்கப்பட்டதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது.

ரஜனிகாந்த், தர்சன், அஞ்சனன், துசிந்த் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கான ஒளிப்பதிவு ஆர்.எஸ்.ரமணி. கைத்தொலைபேசியில் தானா இப்படம் படமாக்கப்பட்டது? என சந்தேகம் கொள்ள வைக்கும் அளவிற்கு அட்டகாசமாக இருக்கின்றது ஒளிப்பதிவு. படத்தொகுப்பு குரு, இசை ஜெயந்தன் விக்கி.

இக்குறும்பட தயாரிப்பு குறித்தும் இயக்குனர் குரு குறித்தும் இயக்குனர் மதிசுதா இவ்வாறு தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இக்குறும்படத் இயக்கிய Kuru TK பற்றி படத்துடன் எழுதுகின்றேன். ஆனால் அவர் அறிமுகம் கிடைத்து இது 4 வது வருடமாகும். என்னைப் போல் ஒரு வெறி கொண்ட ஒருவரை பாடசாலை மாணவனாக அறிமுகம் கிடைத்தது. அதன் பின் எமது ”வெந்து தணிந்தது காட்டின்” உதவி இயக்குனர் மட்டுமல்ல பிரதான தூண்களிலும் ஒருவராவார்.

ஒரு தடவை ஒரு கதையைச் சொன்னார். உண்மையில் அது கதை அல்ல ஒரு உணர்வு என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஒரு மாணவனாக இருந்த குருவால் அதை படமாக மாற்ற பட்ஜெட் அமையவில்லை. ஆனால் எனக்கு தயாரிப்பாளர் என்ற எண்ணமெல்லாம் இருக்கவில்லை அந்த உண்டியலை திறந்தால் அதற்குள் 3200/- ரூபாயே இருந்தது. குருவுக்கு தேவைப்பட்டது 3000 ரூபாய் தான். வாங்க மறுத்தவரிடம் சரி பரவாயில்லை கடனாகத் தருகிறேன் என்று கொடுத்து விட்டு என்னாலான உதவிகளையும் செய்து கொடுத்தேன்.

அக்குறும்படத்தை வைத்து ஒரு போட்டியில் 50 ஆயிரம் ரூபாய்க்கான தயாரிப்பு உதவியையும் பெற்றது மட்டுமல்ல இன்னொரு யூரியுப் க்கு அக்குறும்படத்தின் உரிமத்தைக் கொடுத்ததுடன் 75 ஆயிரம் ரூபாய் தயாரிப்பையும் பெற்றிருக்கின்றார். உண்மையில் இது அவரது விசுவாசமான உழைப்புக்கு கிடைத்த பரிசாகும்.