தொலை தூர காதலைப் பேசும் “தொடு தூரம்” பாடல்

639

காலை முதல் மாலை வரை தொடு திரை தான். தொலை தூரத்தில் இருக்கும் எல்லாவற்றையும் தொடு திரையிலேயே பார்த்து விடலாம். புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்… “நீரின்றி அமையாது உலகு” என்ற காலம் போய் “போன் இன்றி அமையாது உலகு” என்று எல்லாமே மாறிவிட்டது.

தொலை தூரத்தில் இருந்தாலும் தொடு தூரத்தில் இருக்கும் டிஜிட்டல் காதல் குறித்து ஈழத்து இசையமைப்பாளர் ஜெயந்தன் விக்கியின் “தொடு தூரம்” பாடல் பேசியுள்ளது. இதனை இசையமைத்து, பாடி, நடித்துள்ளார் ஜெயந்தன் விக்கி.

KM ப்ரொடக்சன்ஸ் கணேசலிங்கம் குபேந்திரன் தயாரிப்பு, வரிகளில் உருவான இந்தப் பாடலை பிரபல ஈழத்து ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் இயக்கி படமாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடலில் கதாநாயகியாக நடிகை, மோடல் தீபிகா குணசேகரன் நடித்துள்ளார். ஜெயந்தனுடன் இணைந்து இப்பாடலினை பிரபல பாடகியும், இராமநாதன் நுண்கலைப்பீட சங்கீத விரிவுரையாளருமாகிய மதுஸ்ரீ ஆதித்தன் பாடியுள்ளார்.

கண்ணை மூடி கேட்கும் போது, அப்படியே ஹரீஸ் ஜெயராஜ் இசையில் பம்பை ஜெயஸ்ரீ பாடியதைப் போல் இருக்கின்றது மதுஸ்ரீ இன் தேன்மதுரக் குரல். பாடல் ரொம்பவே இளமையாக இருக்கின்றது.

தொலை தூரத்தில் இருக்கக் கூடிய காதலன் – காதலி, தொலைபேசி ஊடாக காதலிக்கும் விடயங்களை மிகவும் நுணுக்கமாக சின்னச் சின்ன விடயங்களை கூட மிஸ் பண்ணாது அழகாக காட்சிப்படுத்தி இருக்கின்றார் இயக்குனர் ரிஷி செல்வம்.