பூஜையுடன் ஆரம்பித்த சசிகரன் யோவின் புதிய திரைப்படம்!

1065

ஈழ சினிமாவில் கடந்த 07 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பவர் சசிகரன் யோ. திரைப்படங்கள், குறும்படங்கள், பாடல்கள் என அவர் இந்த சினிமாவில் ஒளிப்பதிவாளராகவும், படத்தொகுப்பாளராகவும் பெற்ற அனுபவங்கள் ஏராளம். இயக்குனராகவும் பல படைப்புக்களில் அசத்தியிருக்கின்றார்.

அவரின் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய “வெளிநாட்டு” காசு வெப் தொடரும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தனது முதல் திரைப்படத்திற்கான அறிவிப்பை அதன் பூஜையுடன் விடுத்திருக்கின்றார் சசிகரன்.

கர்ணன் படைப்பகத்துடன் இணைந்து “திரை” இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றது. சபேசன், கீர்த்தி பிரதான பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் கப்டன் பாஸ்கரன், பபிதன், டாரியன், ஜெனிஸ்டன், குகன் ஆருஷ், தயா, வஜி வரன், வாணி, விமல்ராஜ், தங்கத் தமிழன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப விடயங்களை சசிகரன் யோவின் YTS Studios Picture கவனிக்கின்றது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான இசையை ஈழத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான பத்மயன் சிவா அமைக்க இருக்கின்றார்.

சினிமாத்துறையில் சசிகரன் பெற்ற அனுபவங்கள் அனைத்தும் இந்த முதல் திரைப்படத்திற்கு பக்கபலமாக அமையும் என்பதில் ஐயமில்லை. திரைப்படம் விரைவில் திரை கண்டு வெற்றி பெற குவியம் இணையம் சார்பில் வாழ்த்துகின்றோம்.