மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்திற்கு மற்றுமோர் சர்வதேச விருது!

370

ஏற்கனவே 20 இற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைக் குவித்துள்ள மதிசுதாவின் “ஈழத்தின் வெந்து தணிந்தது காடு” திரைப்படத்திற்கு மற்றுமோர் சர்வதேச விருது கிடைத்திருப்பதாக, இயக்குனர் மதிசுதா மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

எனது திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகி சர்வதேச அரங்குகளில் விருது விழாக்களில் வலம் வந்து கொண்டிருக்கும் ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படமானது. இந்தோனேசியாவில் இடம்பெற்ற ANGKOR WAT INDEPENDENT FILM FESTIVAL இல் BEST MUSICAL THEME இற்கான விருதை திரைப்படத்தின் இசையமைப்பாளரான பத்மயனுக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றது.

இப்போட்டியில் 500 திரைப்படங்களுக்கு மேல் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இத்திரைப்படத்தின் இசையமைப்பிற்காக ஏற்கனவே தாய்லாந்திலும் பத்மயன் விருதைப் பெற்றிருக்கின்றார். இதுவரை எமது திரைப்படம் 22 சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றது.

மதி பிலிம் ஃபக்டரி சார்பில் “கிரவுட் ஃபண்டிங்” முறையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை மதிசுதா தயாரித்து வருகின்றார். ஈழ சினிமாவில் இந்தத் திரைப்படம் மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படம் திரைக்கு வரும் என்ற செய்தியை அறிவித்திருக்கும் இயக்குனர் மேலும் பல அறிவிப்புக்களையும் ஈழ சினிமா விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராகின்றார் என்கிற செய்தியும் குவியத்திற்கு கிடைத்திருக்கின்றது. விரைவில் அந்த அறிவிப்புக்கள் குவியம் இணையம் மூலம் வெளிவரும்.