பிரான்ஸில் திரையிடப்படும் PKM – சிவராஜ் அன்று சொன்னது இன்று நடக்கிறது!

586

சிவராஜ் இயக்கத்தில் வெளிவந்த “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” (PKM) திரைப்படம் இன்று (22) பிரான்ஸ் தலைநகர் பரீஸில் திரையிடப்படுகிறது.

இன்று மாலை 5.45 மணிக்கு இல. 39 bd de Strasbourg, Paris 75010 என்ற இடத்தில் இப்படம் திரையிடப்படுவதால் வாய்ப்புள்ளவர்கள், ஈழ சினிமா அபிமானிகளை கலந்து கொள்ளுமாறு படக்குழுவினர் கேட்டுள்ளனர்.

இந்த நேரத்தில் சிவராஜ் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னதாக வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி கண்ணில் பட்டது. அதில் “ஈழத்திரைக்கு எதிர்காலத்தில் தனித்துவம் கிடைக்கும்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மை தான், அந்த தனித்துவத்தை நோக்கித்தான் ஈழ சினிமா பயணித்துக் கொண்டிருக்கின்றது. அந்த பயணத்தை வர்த்தக ரீதியிலான வெற்றிகள் உயிர்ப்புடன் வைத்திருக்கும். வர்த்தக ரீதியிலான வெற்றிக்கு சிவராஜின் “புத்திகெட்ட மனிதர் எல்லாம்” சிறந்த எடுத்துக்காட்டு.

இலங்கையில் வெற்றிகரமாகத் திரையிடப்பட்ட இந்தப்படம் இன்று பிரான்ஸில் திரையிடப்படுகின்றது. எதிர்வரும் வாரத்தில் நோர்வேயில் திரையிடப்படவுள்ளது. (ஏற்கனவே நோர்வே தமிழர் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தது). இவையெல்லாம் எம் சினிமாவில் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் கலைஞர்களுக்கு பெரும் உந்து சக்தியாகும்.