‘பாலை நிலம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு

426

யூட் சுகியின் தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவில் ஈழத்தின் மண்வாசனையுடன் தயாரிக்கப்பட்ட ‘பாலை நிலம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

திரைப்படத்தின் நடிகரும் தயாரிப்பு முகாமையாளருமான மகேந்திரசிங்கம் தலைமையில், IBC தமிழ் கலையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடல்களை, படத்தின் இசையமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை பிரசாந் வெளியிட, IBC தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி முகாமையாளர் அபயன் கணேஸ் பெற்றுக்கொண்டார்.

‘பாலைநிலம்’ திரைப்படத்தின் பாடல்களை, ரதி தனஞ்சயன் ரொனால்ட் ஆகியோர் எழுதியுள்ளனர். பாடல்களை மடோனா, ஜெயந்தன், சுவர்னா, நிதுஷா, நிம்ஷா மற்றும் மதுபாலா ஆகியோர் பாடியுள்ளனர்.

நான்கு பாடல்கள், சண்டைப்பயிற்சி என அமைந்த ‘பாலைநிலம்’ திரைப்படம் வெகு விரைவில் வெளியிடப்படும். அனைவரும் எமது கலைப்படைப்பிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான யூட் சுகி தெரிவித்தார்.

அத்துடன், தான் வெளிநாடொன்றில் உள்ள காரணத்தினால் இசை வெளியீட்டில் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை எனவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் படத்தினை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இசை வெளியீட்டு நிகழ்வில், படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.காந்தன், நடிகை சாயா, திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.