எம் கலைஞர்களுக்கான மாபெரும் விருதுக் கொண்டாட்டம் – குவியம் விருதுகள் 2022 – ஒக்டோபர் 29 இல்!

1031

எம் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருதுக் கொண்டாட்டம் “குவியம் விருதுகள் 2022” நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் (யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில்) இடம்பெறவுள்ளது.

மாலை 05 மணிக்கு ஆரம்பமாகும் இந்த விழாவில் கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பைத் (RED CARPET) தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகும். பல கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற காத்திருக்கின்றன.

இந்த நிகழ்வுக்கு பிரதான அனுசரணையை கனடா தமிழ் பசங்க (CTP) வும் இணை அனுசரணையினை ARC Mobile உம் வழங்குகின்றன.

குறும்படங்கள் மற்றும் காணொளிப்பாடல்களுக்காக வழங்கப்படவுள்ள இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டிருந்தன. அதற்கமைய கிடைக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான படைப்புக்களில் இருந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விபரங்கள் விழா மேடையில் அறிவிக்கப்படவுள்ளதுடன் விருதுகளும் வழங்கிவைக்கப்படவுள்ளன.

தவிர, முதல் தடவையாக இடம்பெறவுள்ள குவியம் விருதுகள் நிகழ்வில் பல சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. கடந்த 10 வருடத்திற்கும் மேலாக இந்த துறையில் இயங்கிக் கொண்டிருப்பவர்களும் பல இளம் கலைஞர்களும் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

அதுமட்டுமல்லாது இந்த துறையில் நீண்ட காலம் இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த கலைஞர் ஒருவரும் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளார்.

எம் கலைஞர்களை நாங்களே கொண்டாடி மகிழக்கூடிய இந்த நிகழ்வில் துறை சார்ந்தோர் மற்றும் எம் சினிமாவை ஆதரிக்கும் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.