பிரபல வானொலி, தொலைக்காட்சி, திரைப்படக் கலைஞர் பிரியாவுக்கு கௌரவம்

194

வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட நடிகையான ப்ரியா டேனியல் அவர்களுக்கு கடந்த 05ஆம் திகதி கௌரவிப்போடு அமைந்த பாராட்டு விழா கொழும்பு திம்பிரிகஸ்யாய சென்.தெரேஸா’ஸ் திருச்சபையின் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சிறு குழந்தையாக இருந்த காலம் தொடக்கம் சுமார் 40 வருட காலமாக இத்துறையில் தனது பங்களிப்பை வழங்கி வரும் ப்ரியாவுக்காக நடாத்தப்பட்ட இந்நிகழ்வை பிரியா டேனியல் அவரது சகோதரி ஷர்மிளா சந்திரகாந்தன், சகோதரர் ரொனி டேனியல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத், பிரபல நடிகர் ராஜா கணேசன், வானொலி கலைஞர் மஹ்திஹசன் இப்ராஹிம், பாடகர் வீ. முத்தழகு, அறிவிப்பாளர் நாகபூசணி, நடிகை ஜெயஜோதி, அறிவிப்பாளர் சீதாராமன் மற்றும் பிரபல கலைஞர்களும் இந்நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

இசையமைப்பாளர் சுருதி பிரபா, நடிகர் மோகன் ராஜ், பாடகர் முருகேஷ், பாடகர் ரோய், விளம்பர ஊடகவியலாளர் சச்சின், பாடகி நூர்ஜான் மர்சூக், வானொலிக் கலைஞர் சில்மியாக ஹாதி, டாக்டர் கலைஞர் ரமேஷ் உட்பட கலைஞர்கள், அனுசரணையாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி இந்த நிகழ்வில், பிரியாவை பாராட்டி, பலரும் தமது வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் தெரிவித்தனர்.

பி.எச். அப்துல் ஹமீத் முன்னிலையில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வினை உவைஸ் ஷெரீப் முழுமையாக, சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

இந்நிழ்வினை பிரபல பாடகர் மஹிந்த குமார் சிறப்பாக ஒழுங்கமைத்து வழங்கினார்.