தமிழ் சினிமாவில் பொத்துவில் அஸ்மினின் மற்றுமொரு தடம் “திரும்பிப்பார்” திரைப்படம்!

394

விஜய் அன்டனியின் “நான்” திரைப்படத்தின் “தப்பெல்லாம் தப்பே இல்லை..” என்ற பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் நம்மவரான கவிஞர் அஸ்மின். பொத்துவில் அஸ்மின் என்ற பேரையுடைய இவர் “இசை இளவரசர்கள்” நிகழ்ச்சி மூலம் இலங்கையில் பிரபலமாகியிருந்தார்.

தனது கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியின் மூலம் தென்னிந்திய திரையுலகில் கால் பதித்து நான், அமர காவியம் உள்ளிட்ட படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இந்நிலையில் அவரது வரிகளில் அனைத்து பாடல்களையும் உள்ளடக்கியதாக புதியதொரு திரைப்படம் வெளிவரவுள்ளது.

பவி வித்யா லக்ஷ்மி புரொடக்சன் கிரி தயாரிப்பில் “கொம்பு” படத்தின் இயக்குனர் E.இப்ராஹீம் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம்  “திரும்பிப்பார்”. இப்படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியீடு அண்மையில் நடந்தது.

வித்யா பிரதீப், ரிஸி ரத்திக், ராஜ்குமார், பிக்பாஸ் டேணி, நாஞ்சில் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள்  நடித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கினை இயக்குனர்கள் அமீர், சிம்பு தேவன், மடோனா அஸ்வின், தயாரிப்பாளர் சி.வி.குமார், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஸ், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஸ், நடிகர்கள் விக்ரம் பிரபு, மஹத், யாசிகா ஆனந்த் மற்றும் பல திரைப்பிரபலங்கள் வெளியிட்டனர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு யுத்தகளத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காக பயன்படுத்தப்பட்ட “நிழல் நடை”  என்ற யுத்த தந்திரத்தை மையமாக வைத்து இந்திய சினிமா வரலாற்றில்  முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஆக்சன், த்ரில்லர், நகைச்சுவை கலந்த படமாக வெளிவரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும்  பாண்டிச்சேரி சேரியில் நடைபெற்று முடிந்தன.

BMD சினிமா இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு தேவ்குரு இசையமைத்துள்ளார். பாடல்வரிகளை கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார். ஒளிப்பதிவினை சக்திப்பிரியனும், படத்தொகுப்பை பி.ஆர்.பிரகாஸ், ஸ்டன்ட் பயிற்சிகளை ஜாக்குவார் தங்கம் மற்றும் விஜய் ஜாக்குவார் ஆகியோர் செய்துள்ளார்.

நடனம் சசிகுமார், ஆடை வடிவமைப்பு தனா, ஆடியோ கிராபர் விபி.சுகவேதன், மேக்கப் சசிகலா, மக்கள் தொடர்பு பணியில் வேலு ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீடு குறித்த அதிகார அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இந்தப்படத்தின் பாடல்கள் வெளியானால் கவிஞர் பொத்துவில் அஸ்மினின் புகழ் மேலும் ஓங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கவிஞருக்கு குவியம் இணையத்தின் வாழ்த்துக்கள்.