“நாளைய உலகம் இளையோர் கையில்” – குறும்படப்போட்டி விருதுகள் வழங்கும் நிகழ்வு

185

கர்ணன் படைப்பகம் “நாளைய உலகம் இளையோர் கையில்” எனும் தலைப்பில் நடாத்திய குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23.07.2023) மாலை 04 மணிக்கு யாழ்ப்பாணம் யு.எஸ்.விருந்தினர் விடுதியில் இடம்பெறவுள்ளது.

குவியம் மீடியா நிர்வாக இயக்குனர் கனகநாயகம் வரோதயன் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ரகுராம் கலந்து சிறப்பிக்கின்றார்.

சிறப்பு விருந்தினர்களாக வைத்திய கலாநிதி சிவன் சுதன் (தயாரிப்பாளர் – தூவானம் திரைப்படம்), முன்னாள் யாழ். வலயக்கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன், சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம், கர்ணன் படைப்பக நிறுவுனர் சண்முகநாதன் சபேசன், யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் துறைத்தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் குறும்படப்போட்டியில் முதலிடம் பெறும் குறும்படத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வெற்றிக்கேடயமும் வழங்கப்படவுள்ளதுடன், 2ஆம் மற்றும் 3 ஆம் இடங்களைப் பெறும் குறும்படங்களுக்கு முறையே 30 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வெற்றிக்கேடயங்களும் வழங்கப்படவுள்ளன.

முதல் 10 இடங்களுக்குள் தெரிவான ஏனைய 07 குறும்படங்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளன. மேலும் சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் ஈழ சினிமா கலைஞர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அன்புடன் அழைத்துள்ளனர்.